#825 to #828

#825. போகத்தை யோகமாக்க வேண்டும்

பூசுவன எல்லாம் பூசிப் புலர்த்திய
வாச நறுங்குழல் மாலையும் சாத்திக்
காயக் குழலி கலவியொடும் கலந்து,
ஊசித் துளையுற, தூங்காது போகமே.

பூசத் தகுந்த வாசனைப் பொருட்களை எல்லாம் பூசிக் கொண்ட ஓர் ஆடவன், மணம் வீசும் மலர் மாலையை அணிந்த ஒரு பெண்ணுடன் புணர்ச்சியில் ஈடுபடும் பொழுது அவன் உள்ளம், தலை உச்சியில் உள்ள பிரமரந்திரத்தின் மீது நிலைத்திருந்தால் அந்தப் புணர்ச்சி தளர்ச்சி அடையாது.

#826. நாத விந்துக்களாக மாறிவிடும்!

போதத்தை உன்னவே போகாது வாயுவும்
மேகத்தை வெள்ளியும் மீளும் வியாழத்தில்
சூதொத்த மென் முலையாளும் நல் சூதனும்
தாதில் குழைந்து தலை கண்டவாறே.

உச்சித் தொளையாகிய பிரமரந்திரத்தில் விளங்குகின்ற பேரறிவு பொருந்திய சிவனை எண்ணியபடி ஓர் ஆடவன்
புணர்ச்ச்சியில் ஈடுபட்டால், அவனது காம வாயு விரைவாகத் தொழில் புரியாது. . நீரின் தன்மை கொண்ட அவன் சுக்கிலம் பெண்ணின் சுரோணிதத்தில் கலக்காமலேய திரும்பிவிடும். சூதாடும் கருவியைப் போன்ற ஸ்தனங்கள் உடைய பெண்ணும், உடல் என்னும் தேரைச் செலுத்தும் ஆடவனும், செய்த இந்தக் கூட்டுறவால் வெளிப்பட்ட சுக்கிலமும் சுரோணிதமும் நாத விந்துக்களாக மாறித் தலையில் சென்று பொருந்தும்.

இந்த யோகத்தில் ஈடுபடுபவன், தன் தலையில் நாதமாகிய சிவனும் விந்துவாகிய சக்தியும் விளங்குவதைக் காண்பான். பிரமரந்திரத்தை நினைவில் கொள்வதால் காம வாயு சுக்கிலத்தை நீக்கம் செய்யாது. அது நேராக மூலாதாரத்திலிருந்து தலையைச் சென்று அடைந்துவிடும்

#827. உடல் தளராது

கண்டனும் கண்டியும் காதல்செய் யோகத்து,
மண்டலம் கொண்டுஇரு பாலும் வெளிநிற்கும்
வண்டியை மேல்கொண்டு வான் நீர் உருட்டிடத்
தண்டு ஒருகாலும் தளராது அங்கமே.

ஒரு தலைவனும் தலைவியும் விருப்பத்துடன் கூடிப் புணரும் போது; அக்கினி மண்டலம், கதிரவன் மண்டலம் என்ற இரண்டையும் கடந்து மேலே சென்று; சந்திர மண்டலத்தில் தலையின் மேலே உள்ள வெளியை உணருவர். அங்கு சந்திர மண்டலத்தில் வான் கங்கை ஒளியைப் பெருக்கும். அதனால் அவர்கள் உடல் ஒரு போதும் தளர்ச்சி அடையாது.

#828. விந்துவை வெற்றி பெறலாம்

அங்குஅப் புணர்ச்சியும் ஆகின்ற தத்துவம்
அங்கத்தில் விந்து வருகின்ற போகத்துப்
பங்கப் படாமல் பரிகரித்துத் தம்மைத்
தங்கிக் கொடுக்க தலைவனும் ஆமே.

புணர்ச்சியின் போது காமத் தீ உடலிலிருந்து விந்துவை நீக்கம் செய்யும். அவ்வாறு நிகழாமல் விந்துவைப் பாதுகாத்து யோகத்தால் விந்து நீக்கத்தை வெற்றி கொண்டவன் ஒரு தலைவன் ஆவான்.